எண்ணுமிலை பேச எழிற்படமு மில்லைநீ
நண்ணுவதற் கருகில் நற்பொருளு மில்லைதான்! - மண்ணில்
மறந்தாரை மீண்டும் நினைப்பாரே; நெஞ்சில்
சிறந்தாரை யாங்ஙனம் யான்?
யானுனை நெஞ்சத் திருத்தியே வாழ்கின்றேன்!
தேனுலாஞ் சொல்லாய் திகழ்கின்றாய் - வானத்து
மீனைப் பழிக்கும் விழியினாய்; நின்நினைவை
யானொழிக்க மாட்டா திங்கு.
இங்குன் நினைவே இதயமாகி நின்றதால்
எங்குமே நீயாய் இருக்கின்றாய்! - தங்குமோர்
சின்ன நினைவுப் பொருளுமிலைக் காதலுக்குச்
சொன்ன குறிகாட்டும் சூது.
சூதொன்று மின்றியே தூயவளுன் பேரன்பு
காதொளிரும் பூணாய் கலந்ததே! - போதொளிரும்
கூந்தலாள் நின்னைக் குறியாகக் கொண்டென்றும்
ஏந்துவேன் நெஞ்சில் இவண்.
இவணென் னுயிராய் இருக்கின்றாய் நீயே!
எவராலும் நின்னையென் நெஞ்சில் - எவரும்
பிரிக்கவொணா வண்ணம் பிணைத்தேன்; பிரிந்தோர்
தரிக்காரே காதலின் தண்.
தண்கொண்ட மாமதிபோல் தண்மழையாய்ப் பெய்கின்றாய்!
கண்கண்ட தேவதையே காதலி நீ! - எண்கொண்ட
பேச்சில்லை, பார்க்கப் படமில்லை, ஆயினும்
மூச்சில்லை நீயின்றி மொய்ம்பு.
மொய்ம்புகொள் காதலால் மொய்த்தவென் நெஞ்சமிது!
மெய்யுருகி நின்னையே வேண்டினதே! - வையத்து
மற்றாரை யெல்லாம் மறக்கலாம்; நின்னையென்
சுற்றமாய் ஏற்றபின் சூழ்ந்து.
சூழ்ந்துன் நினைவே சுடராகி நின்றெரியச்
சூழ்ந்தவிந்தக் காரிருளும் தோற்குமே! - தாழ்ந்தே
உருகும் மெழுகாய் உடலடி; நின்றன்
வருகையையே நோக்கும் மனம்.
மனத்தினுள் வாழும் மயிலனையாய் நின்னைக்
கனவிலும் யானே கருதி - நினைவழியாத்
தன்மையால் பெற்றேன் தகவோடு; நின்னையான்
புன்மையால் போக்கல் புரை.
புரைதீர் குணத்தவளே பொன்னேநீ என்றும்
அரைநொடியும் நீங்கா தருளாய்! - உரைசெய்
படமுமில்லை பேசவும் எண்ணுமிலை; நெஞ்சில்
இடமுண்டு வாழா தியம்பு.
Monday, May 18, 2026
தேடிய வாழ்க்கையே வேடிக்கை பார்க்குங்கால்...!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment