Wednesday, May 13, 2026

மக்களின் பார்வையில் மக்களாட்சி...!

கந்தை அணிந்தும் கனவுயர்ந் தேநிற்க
விந்தை நிழலுருவம் மேன்மையாய்த் - தந்துமே
முன்னேற வைக்கும் முயல்தவறா துழைக்கப்
பின்னேறும் துன்பப் பிணி.

மாற்றம் விரும்பி மக்கள் திரண்டனரே
ஏற்றம் பெறுமா இச்சூழல் - காற்றில்
கலந்த கனவு காணல் ஆகுமோ
பொங்கும் புதுமை எழும்.

மக்களின் வாக்கை மாற்றுவோம் என்றாரே
சிக்கலை தீர்ப்பரா செம்மையாய் - மக்கள்
நலம் நாடுவோர் நல்வாழ்வு தருவாரோ
வளம் நிறைந்து வருமோ.

வேற்றுமை நீங்கி ஒற்றுமை காணாரோ
போற்றுவர் மக்கள் பொலிவுடன் - ஏற்றம்
பெறுமா இத்தேச சூழல் இனிதே
தோற்றுமோ தீய செயல்.

தேனொழுகப் பேசித் தெருவெல்லாம் வாக்குறுதி
வானை வசமாக்க வல்லாராய் - ஏனோ
அரியணை ஏறின் அறிவழிந்து நிற்பார்
வரிப்பணத்தை வாங்கும் வகை.

ஆடுகின்ற பொம்மைகளாய் ஆன்றோர் அறிவுரை
கேடிலா மக்கள் கிளர்ந்தெழார் - பீடுடைய
மாற்றமென எண்ணி மயங்கி விழுகின்றார்
ஏற்றமுறு மேடைப் பேச்சு.

பழையன கழிதலும் பண்பிலார் புகுதலும்
பிழையெனத் தேயும் பிழைப்பு - சுழலுமே
வண்ணங்கள் மாறி வருமேயன்றி வாழ்வில்
உண்ணும் சோறாகா உரை.

வேடிக்கை பார்த்தே விடியலும் போனதே
நாடாளும் கள்ளர் நயம் பேசி - நாளும்
வியத்தகு நன்மைகள் கிட்டுமோ வீணே
மயக்கத்தில் ஆழும் மனம்.

பணச்சுமை ஏறிப் பகலெல்லாம் வாட
குணமிலார் ஆட்சி கொடுமை - உணவின்றி
மக்கள் தவிப்பாரே மாற்றமது வாராதோ?
தக்க வழிதான் எது.

கட்சிகள் மாறிக் கரைவேட்டி மாறினும்
நிச்சயம் மாறா நிலைமைதான் - பிச்சைபோல்
நன்மை பயக்குமோ நாடாளும் மாண்பிலார்?
புன்மை புகுத்தும் பொழுது.

#மக்களின்_பார்வையில்_மக்களாட்சி

No comments:

Post a Comment